ரிதன்யா மாமியாரின் ஜாமின் மனு தள்ளுபடி..
ரிதன்யா மாமியார் சித்ராதேவி ஜாமின் மனு தள்ளுபடி செய்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்த ரிதன்யா என்கிற இளம்பெண், வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 300 சவரன் நகைகள் மற்றும் 75 லட்சம் ரூபாய் மதிப்பில் வரதட்சனை கொடுத்தும், மேலும் 200 சவரன் நகை வேண்டும் என கணவர் குடும்பத்தினர் ரிதன்யாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறி காரில் சென்ற ரிதன்யா, அவிநாசி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு பூச்சிமந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின் குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோ முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், 3வது குற்றவாளியான அவரது மாமியார் சித்ரா தேவியையும் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமின் வழங்கக்கோரி மனுதாக்கல் செய்த நிலையில், ரிதன்யாவின் பெற்றோர் குடும்பத்தினர் தரப்பில், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 7 ம் தேதி விசாரணைக்கு வந்த போது கவின் குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து சித்ரா தேவி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த 9ம் தேதி ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியின் ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஜூலை 11 நடைபெறும் என தெரிவித்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜாமின் வழங்க ஆட்சேபனை தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்! இதனையடுத்து ரிதன்யா மாமியார் சித்ராதேவி ஜாமின் மனு தள்ளுபடி செய்து திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


