"வெள்ளத்துரை ஐபிஎஸ் என்ட்ரி.. என்கவுண்டர் பயம்" - சரணடைந்தார் படப்பை குணா!
தொழில் நிறுவனங்களைச் சுற்றியுள்ள மக்கள் வர்த்தகம் சார்ந்து வளர்கிறார்கள். கூடவே ரவுடிகளும் உருவாகிறார்கள். சின்ன ரவுடிகளாக இருக்கும் அவர்கள் தொழில் நிறுவனங்களை மிரட்டி மாமூல் வாங்கி, பெரிய காசை பார்த்தவுடன் பத்து பேரை கூட்டு சேர்த்துக்கொண்டு பெரிய தாதாக்களாக மாறிவிடுகின்றனர். வேறு வழியில்லாமல் தொழில் நிறுவனங்களும் மாமூல் கொடுத்து பிரச்சினைகள் வரமால் சமாளிக்கின்றன. ஆனால் ஒருசில நிறுவனங்கள் பயப்படாமல் எதிர்த்து நின்றால் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.
ஊழியர்களைப் பிடித்து அடிப்பது, நிறுவனத்தின் பேருந்துகளைச் சேதப்படுத்துவது என அடிபொடிகளை கொண்டு அட்டூழியம் செய்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் படப்பை குணா. இவர் படப்பை, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார். தனக்கு கீழ் செயல்படும் கிளை ரவுடிகளைக் கொண்டு மிரட்டி அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பெரும் பணத்தை சுருட்டி வந்தார். கட்டப்பஞ்சாயத்து, அடிதடியிலும் ஈடுபட்டு வந்தார்.
இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனாலும் இவருடைய கொட்டம் அடங்கியபாடில்லை. இதற்கு முடிவுகட்ட நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து அரசிடம் முறையிட்டன. காவல் துறையை களமிறக்கியது அரசு. அதன் ஒருபகுதியாக தான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை காவல் துறை தலைமை வரவழைத்தது. உடனடியாக படப்பை குணா தலைமறைவானார். ஆனால் அவரது மனைவி எல்லம்மாளை கைது செய்தனர். குணாவை என்கவுண்டர் செய்யப் போவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் எல்லம்மாள் வழக்கு தொடர்ந்தார்.
தன்னுடைய கணவரை என்கவுண்டர் செய்ய காவல் துறை திட்டமிட்டிருப்பதாக முறையிட்டார். ஆனால் காவல் துறை மறுக்கவே அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. இச்சூழலில் இரு வாரங்களுக்கு முன்பு படப்பை குணாவுக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று இன்ஸ்பெக்டர்களை இடமாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல் துறை மறுத்தபோதிலும் குணாவை என்கவுண்டர் செய்ய தீர்மானித்துவிட்டதாகவே கூறப்பட்டது. இதனால் பயந்துபோன குணா தற்போது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.