ஓசியில் சில்லி சிக்கன் தர மறுத்த பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி
சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பெரியப்புதூரை சேர்ந்தவர் செல்லக்கிளி. இவர் அந்தப் பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைக்கு அழகாபுரத்தைச் சேர்ந்த ரவுடி சந்தோஷ்குமார் வந்துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் , அவர் சில்லி சிக்கன், ரைஸ் ஆகியவற்றை இனாமாக கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. சந்தோஷ்குமார் போதையில் இருந்ததால், செல்லக்கிளி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் , நள்ளிரவில் பீர் பாட்டிலில் , பெட்ரோல், மண்ணெண்ணை நிரப்பி அதில் தீ வைத்து செல்லக்கிளியின் வீட்டின் முன்பாக வீசிவிட்டு சென்றுவிட்டார். நல்வாயப்பாக வீட்டின் கதவில் பட்டு கீழே தரையில் விழுந்ததால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீ பரவாமல் தடுத்து அனைத்து உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடைந்து கிடந்த பாட்டில்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இலவசமாக சில்லி சிக்கன் தராததால் பெட்ரோல் குண்டை ரவுடி சந்தோஷ்குமார் வீசி சென்றதாக மக்கள் தெரிவித்தனர். அடுத்து இன்று அதிகாலை போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பெரிய புதூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


