தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு


அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க,  தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம்  தமிழ் பரப்புரை கழகத்தை  உருவாக்க  ரூ. 1 கோடி   நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து  தமிழக அரசு வெள்யிட்டுள்ள அரசாணையில்,  “ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்,கடந்த 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.

தமிழக அரசு - பரிசு அறிவிப்பு

 அதில்,  உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர்.அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன.இதனால்,கற்பதற்கான வசதிகள் இல்லாமை,தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் இல்லாமை என இருக்கும் சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்,பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிகளாக கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும். அகரம் முதல் சிகரம் வரை எனப் பல படிநிலைகளாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டுச் சான்றிதழ் தேர்வும் நடத்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு அரசாணை

இதனையடுத்து தற்போது  தமிழ் வளர்ச்சி  2021-2022-ஆம் ஆண்டிற்கான  மானியக் கோரிக்கையின்படி, அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம்,  தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி  வழங்கப்படுவதாக  தமிழக அரசு அரசாணையில் தெரிவித்திருக்கிறது.