அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி.. தலைமை செயலக ஊழியர் கைது..
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமை செயலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறையில் பணியாற்றி வருபவர் நிக்சன். இவர் வில்லிவாக்கம், பெருமாள் காலனியில் வசித்து வரும் ராஜமுருகபாபு என்பவரிடம், தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை காட்டியிருக்கிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் ராஜமுருகபாபுவிடம் ரூ. 14 லட்சம் பணமும் வாங்கியிருக்கிறார்.
ஆனால் வேலை வாங்கித் தராமல் நிக்சன் அலைக்கழித்து வந்துள்ளார். அவருக்கு உடந்தையாக வருவாய் பிரிவு அலுவலர் கோமதி என்பவரும் ராஜமுருகபாபுவை தொடர்ந்து அலைக்கழித்து வந்திருக்கிறார். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டும் நிக்சன் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனையடுத்து ராஜமுருகபாபு , நிக்சன் மீது கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நிக்சன் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமை செயலக ஊழியர் நிக்சனை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள வருவாய் துறை அதிகாரி கோமதியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.