சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533 கோடி.. இந்திக்கு கூட அதிகம் தான்.. ஆனா தமிழுக்கு?? ஆர்.டி.ஐ. தகவல்..
10 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு மட்டும் ரூ.2,533 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது.
மத்திய பாஜக அரசு , மொழி பாகுபாடு காட்டிவருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் விதமாக சமஸ்கிருத மொழியை மட்டும் மேம்படுத்த மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது. 2014-15 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.230 கோடி ஒதுக்க்ஈடு செய்யப்பட்டுள்ளது.

2004ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழைவிட 2005ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.230 கோடியை அள்ளிக்கொடுத்த ஒன்றிய அரசு , மற்ற செம்மொழிகளுக்கு கிள்ளிக்கொடுத்திருக்கிறது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிகமாக ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியிருப்பதும், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதியில் வெறும் 5% மட்டுமே மற்ற 5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.


