தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூ. 30 கோடி மோசடி - மதுரை ஆவினில் நடந்த குளறுபடி!!
மதுரை ஆவின் நிறுவனத்திற்கு தரமற்ற இயந்திரங்களை வாங்கி ரூபாய் 30 கோடி மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளது. ஆவின் உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி அப்போதைய பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி சுமார் 3 கோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்தும் , தனிப்படைகள் அமைக்கப்பட்டும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் நேற்று மேற்கொண்ட ஆய்வின்படி கொரோனா காலகட்டத்தில் ஆய்வுகள் நடைபெறாமல் இருந்ததை சாதகமாக பயன்படுத்தி ஆவின் நிறுவனத்தில் மோசடி நடந்துள்ளது . அதன்படி பால் டப்பாக்களை முறைகேடாக வெளியே எடுத்து செல்வதை தடுக்க, ஐந்தாயிரம் டப்பாக்களில் எலக்ட்ரானிக் பொருத்தப்பட்ட நாள் முதல் , இன்று வரை செயல்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால் விநியோகம் செய்யும் வாகனங்களில் தரமற்ற ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் 10 ஏக்கர் நிலத்தில் 13 கோடிக்கு சூரிய ஒளி மின் திட்டத்தில் பயன் இல்லை என்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆவின் நிறுவனத்தில் தரமற்ற சோலார் பேனல்கள் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தரமற்ற இயந்திரங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு திட்டங்கள் முடங்கி இருப்பதுடன் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.