பேரிடர் காலத்தில் யார் நல்லது செய்தாலும் திமுக வரவேற்கும்- ஆர்.எஸ்.பாரதி

 
rs

பேரிடர் குறித்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் பிரதமரிடம் முன்வைப்பார், அவர்கள் நல்ல எண்ணத்தோடு நடந்து கொள்வார்கள் என நம்புகிறோம் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

RS Bharathi

திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவப்படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கருணாநிதி புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் திமுகவின் அமைப்புச் செயலாளரும் , முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.

கண்காட்சியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “பேராசிரியரின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் திமுகவின் தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை திமுகவினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அதிமுகவின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவமனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள்

rs bharathi

பேரிடர் குறித்தான முக்கிய கோரிக்கைகளை தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் முன்வைப்பார், அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறோம். பேரிடர் குறித்து ஆளுநர் ஆய்வுக் கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை திமுக வரவேற்கும்” என்றார்.