கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... 7% வரை உயர்த்தி வழங்க அனுமதி...
தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் செயல்படுகின்றன. இதில் எழுத்தாளர், கணக்கர். காசாளர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு நிர்ணயம் செயப்பட்ட ஊதிய நடைமுறையே தற்போது வரை பின்பற்றப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு, ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை பரிசீலிப்பது தொடர்பாக , கூடுதல் பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
தற்போது அந்தக் குழு, புது ஊதியம் நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் கூட்டுறவுத் துறை புதிய ஊதியம் நிர்ணயம் செய்யுமாறு மண்டல இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 % ஊதிய உயர்வும், நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5 % ஊதிய உயர்வு அளிக்கும்படி தெரிவித்துள்ளது.
நஷ்டத்தில் செயல்படும் பண்டக சாலை ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதிய உயர்வு , வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து படி, மருத்துவ காப்பீடு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜனவரி முதல் நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது