ரேஷன் கடைகளில் 'ஊட்டி டீ' தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ

 
vanathi srinivasan

'ஊட்டி டீ'க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44  நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திரு. பியூஸ் கோயல் அவர்களை, 'நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க'  பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.

Vanathi seenivasan

பசுந் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து 'இந்திய தேயிலை வாரியத்'திடம் விளக்கம் கேட்டுள்ளார்.நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 அதிமுக ஆட்சியில், 'ஊட்டி டீ' என்ற பெயரில் ரேஷன் கடைகளில்/டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போதுள்ள திமுக அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும்  'ஊட்டி டீ'க்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து  50 முதல் 60 சதவீதம் மட்டுமே டீ தூளை கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம்  டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன. தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில், மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

vanathi--srinivas-3

எனவே, அவர்களின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், 'ஊட்டி டீ' தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 'ஊட்டி டீ'க்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும். அதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம்  பசுந் தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.