“நான் என்ன தவறு செய்தேன்? உங்களை முதல்வர் ஆக்கியது குற்றமா?”- எடப்பாடியில் கர்ஜித்த சசிகலா

 
சசிகலா

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

சசிகலா


கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில், கட்சியின் வேட்பாளர் ஏ.எல். சுரேஷ் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய சசிகலா, “நான் ஒன்பது வருட காலம் காத்திருந்தேன்... எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ தொல்லைகள் கொடுத்தார்கள். ஆனால் நான் நம்பியவர்களே என் முதுகில் குத்திவிட்டார்கள். அவர்களுக்கு நான் என்ன தவறு செய்தேன் என எனக்கே தெரியவில்லை. உங்களை முதல்வர் ஆக்கியது குற்றமா? அதற்காகதான் என்னை கட்சியில் இருந்து நீக்கினீர்களா? ஃபிரிட்ஜ் வாங்கி தருவதாகவும்,10000, ரூபாய் பணம் தருவதாகவும், சிலிண்டர் காசு கொடுத்து வாங்கினாலே ஒரு மாதம் கழித்து தான் வரும் ஆனால் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஒரு மாதத்திற்கே சிலிண்டர் வராத நிலையில் மூன்று சிலிண்டர் தருவார்கள் என்கிறார்கள். இது ஏமாற்று வேலைதான். நான் இருக்கிறதே மறந்துட்டாங்க... இருவரும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.


ஒரு ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் ஒரு திருமணத்தில் சீப்பை மறைத்து வைப்பது போல அரசியல் நடத்துகிறார்கள். இதற்கு மக்கள் பதில் சொல்ல வேண்டும். நான்தான் முதலமைச்சராக ஆக்கினேன்... ஆனால் அந்த நன்றி, விசுவாசம் இல்லை. மக்களுக்கும் துரோகம் செய்திருக்கிறார். இவருடைய காலடி சட்டசபைக்குள் போகக் கூடாது. எடப்பாடி மக்கள் தக்க பதில் கொடுக்க வேண்டும். அவர் முதலமைச்சராக இருந்தபோது கொடநாடு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. தூத்துக்குடியில் பல உயிர்கள் போய்விட்டன. இது சினிமா மாதிரி நடந்துகொண்டிருக்கிறது. எடப்பாடியில் போட்டியிடும் நமது வேட்பாளர் ஏ.எல். சுரேஷ் அவர்களுக்கு தென்னந்தோப்பு சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கிடைக்க வேண்டும்” எனக் கேட்டுகொண்டார்.