ஆட்சியரை கீழே தள்ளி அராஜக செயல் - சசிகலா கண்டனம்..

 
sasikala

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியரை பிடித்து கீழே தள்ளிய அராஜக செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்வதாக சசிகலா கூறியுள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில் திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்களின் கோஷ்டி மோதலால் மாவட்ட ஆட்சியரையே பிடித்து கீழே தள்ளியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது ஒரு மனிதாபிமானமற்ற அத்துமீறிய செயல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் ஒரு அரசு விழாவில் திமுக தலைமையிலான அரசில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பன் அவர்களுக்கும், ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினரான நவாஸ் கனி அவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், ஒருவரை ஒருவர் சண்டை போட்டுகொண்டு ஒன்றும் அறியாத மாவட்ட ஆட்சியரை பிடித்து கீழே தள்ளிவிட்டது அராஜகத்தின் உச்சம். நம் வருங்கால இளம் சந்ததியினருக்கு முன் மாதிரியாக நடந்து கொள்ளவேண்டியவர்களே, மாணவ மாணவியர்கள் மத்தியில் இதுபோன்று நடந்து கொள்வது மிகவும் வெட்கக்கேடானது. அரசியலில் இருப்பவர்கள் ஐந்து ஆண்டுகாலம் வரை தங்கள் பதவிகளில் வேண்டுமென்றால் நீடிக்கலாம், அரசு அலுவலர்கள் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்களோ 60 வயதில் பணி ஓய்வு பெறும் வரை மக்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றக்கூடியவர்கள். தமிழகத்தில் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாது போனால் சாமானிய மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிறது.

ஆட்சியரை கீழே தள்ளி அராஜக செயல் - சசிகலா கண்டனம்..

சமீபத்தில் இதே போன்று திருச்சியில் கூட திமுகவை சேர்ந்த அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் பொதுவெளியில் சண்டை போட்டு கொண்டதை நாடே பார்த்தது. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தவேண்டிய திமுக தலைமையோ கண்டும் காணாமல் தூக்கத்தில் இருப்பதாலும், கட்டுப்படுத்தமுடியாமல் திணறுவதாலும் இது போன்ற அராஜக செயல்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பான பதவிகளில் இருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்கள் தங்களது கடமையை மறந்து பொறுப்பற்ற வகையில் இதுபோன்று பொது இடங்களில் சண்டை போட்டு கொண்டு தமிழகத்தில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக தலைமை இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் ஏதோ சம்பிரதாயத்திற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து வைத்து கொண்டால் மட்டும் போதாது. காவல்துறையை கையில் வைத்து கொண்டு இருக்கும் தமிழக முதல்வர் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் இது போன்ற அராஜக செயல்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள முடியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றமுடியும்.

எனவே, திமுகவினர் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி, திராவிடத்தை கொச்சை படுத்துவதை நிறுத்திக்கொண்டு, தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.