"எண்ணிலடங்கா பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக வாரி வழங்கிய தங்கத்தாரகை ஜெயலலிதா" - சசிகலா

 
sasikala

 ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அம்மா அவர்களின் பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா என்றால் அன்பு,

அம்மா என்றால் பாசம்,

அம்மா என்றால் நேசம், அக்கறை, அரவணைப்பு, தியாகம் என தாய்மைக்கு இலக்கணமாகவே திகழ்ந்து, “மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76ஆம் ஆண்டு பிறந்தநாளினை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

jayalalitha

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி

மக்களின் மனதில் நிற்பவர் யார்?” என்ற நம் புரட்சித்தலைவரின் பாடல் வரிகளுக்கேற்ப இன்றைக்கும் கோடானு கோடி தமிழக மக்களின் இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவர் அவர்களைப் போன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டவர். எண்ணிலடங்கா பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்காக வாரி வழங்கிய தங்கத்தாரகை.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரை போன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். உலகமே வியக்கும் வண்ணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அத்துனை மக்கள்நலத் திட்டங்களும் இன்றைக்கும் பயனளித்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. தொட்டில் குழந்தை திட்டம், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா மிதிவண்டி வழங்கியது, அம்மா உணவகம், 69 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்தது, காவிரி நதி நீர் பங்கீடுக்கான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது, அதிலும் குறிப்பாக பெண்ணினத்தை பாதுகாத்திடவும், அவர்களது நலனுக்காகவும் கொண்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம், விலையில்லா ஆடு மாடு, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டம் என இன்னும் ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் ஒவ்வொன்றும் வரலாற்றில் முத்திரை பதித்தவை என்பதை சொல்லிக்கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

sasikala

"ஜெ ஜெயலலிதா என்னும் நான்" என்று நம் தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ, அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களது உரிமைகளை பறிகொடுத்து விடாமல், பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் வாழமுடிந்தது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணங்கள் இன்றைக்கும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் ஈடேற்றிடும் வகையில் கழகத்தினர் அனைவரும் ஒன்றிணைவோம், வென்று காட்டுவோம் என இந்நாளில் உறுதி ஏற்போம்.

பெண்ணினத்தின் அடையாளமாக விளங்கிய சிங்கத்தலைவி, தங்கத்தாரகை, சமூக நீதி காத்த வீராங்கனை, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பிறந்த இந்நன்னாளில், நம் கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டில் உள்ள ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அம்மா அவர்களின் பிறந்தநாளினை சிறப்புடன் கொண்டாடுவோம் என அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.