மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதீஷ் குற்றவாளி என தீர்ப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் வாலிபர் சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் காதலித்த நிலையில், சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பால் சதீஷுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13 ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்ற மின்சார ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.
சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு தொடர்பாக, சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சிபிசிஐடி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். அதன்படி இன்று நீதிபதி வாலிபர் சதீஷ் குற்றவாளி என அறிவித்துள்ளார். தண்டனை விவரம் வரும் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


