திமுகவுடன் கூட்டணி சேர்ந்து மகனை துணை முதல்வராக்க இபிஎஸ் திட்டம்?- சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்
தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ? என யூடியூபர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “என்ன ஆகப் போகிறது அதிமுக ? நான் இறந்த பிறக்கும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என்று சூளுரைத்தார் செல்வி ஜெயலலிதா. 27 ஆகஸ்ட் 1996 அன்று, அதிமுகவின் மிக மோசமான தோல்விக்கு பிறகு, செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதம் இது. இந்த தோல்விக்கு நான் தான் பொறுப்பு. “ஒரு குடும்பம் மோசமான ஆட்சிக்கு காரணம்” என்று அதிமுகவின் தொண்டர்கள் கூறியதில் உண்மை உள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த குடும்பத்தை ஒதுக்கி வைக்கிறேன் என்று செல்வி எழுதிய கடிதம்தான் இது. 30 ஆண்டுகள் கழித்து, அவர் எழுத கடிதம் செல்வி ஜெயலலிதாவின் ஆளுமையையும், தலைமை பண்பையும், பெருந்தன்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலில், மிக மோசமான தோல்வியை எம்ஜிஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா உருவாக்கிய அதிமுக சந்தித்திருக்கிறது. இந்த தோல்விக்கு யார் பொறுப்பு என்று அதிமுக தொண்டர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். என்னைத் தவிர எல்லாரும் பொறுப்பு என்கிறார் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கோ சொந்தமாக குடும்பம் இல்லை. ஆனால் “புரட்சித் தமிழர்” எடப்பாடி பழனிச்சாமிக்கு குடும்பம் உள்ளது. இன்று அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது அவர் மகன் மிதுன் மட்டுமே. மிதுன் சொல்வதுதான் இன்று அதிமுகவில் வேதவாக்கு. மிதுன் தான் அதிமுகவை பொருத்தவரை கடவுள். மிதுன் பேச்சை அவர் தந்தை எடப்பாடி பழனிச்சாமியே மீற மாட்டார். தொண்டர்களால் உருவான கட்சியான அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் உருவாவது சரியா ? தன் மகன் மிதுன் துணை முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, திமுகவோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி உதயநிதியை “பாஷ்யம் அபினேஷ் வீட்டில்” சந்தித்ததை மறுக்க அவரால் முடியுமா ? இந்த சந்திப்பு நடந்ததே அவர் மகன் மிதுன் அழுத்தத்தால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி மறுப்பாரா ?
இன்று மக்கள் முன் எழும் கேள்வி, 2 கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக இயக்கத்தை வழிநடத்த எடப்பாடி பழனிச்சாமி தகுதியானவரா என்பது மட்டுமே. எனக்கு என்று குடும்பமே கிடையாது. அதனால் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று பறைசாற்றி அதன் அடிப்படையில் கட்சி நடத்திய செல்வி ஜெயலலிதா அதிமுகவை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றாரா, மகன் மிதுன் பேச்சை கேட்டு அதிமுகவை நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி இட்டுச் செல்வாரா என்பது மட்டுமே !முடிவு அதிமுக தொண்டர்கள் கையில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

