பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..

 
பள்ளி மாணவர்கள்

பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மாணவர்கள் கல்வியை தொடர அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மாணவர்களின் இடைநிற்றல் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதனை  தடுக்கு விதமாக  பள்ளிக்கு செல்லாத குழந்தைகள், இடைநிற்றல் மாணவ-மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை வழங்கவு  பள்ளிக்கல்வித்துறை முயற்சி எடுத்துவருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பணிகளை இப்போதே தொடங்கியுள்ளது. அதன்படி, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணிகளை வருகிற 2-வது வாரத்தில் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பள்ளிக்கல்வித்துறை

இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோரை ஈடுபடுத்துமாறும்,  அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் எந்தவொரு குடியிருப்பையும் விட்டுவிடாமல் வீடுவாரியாக சென்று கணக்கெடுப்பு  நடத்தவும்,  பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச்சரியாக பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இந்த கணக்கெடுப்பின்போது, கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த  மாணவர்களின்  விவரங்களையும்  தனியாக  சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கணக்கெடுப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் முறையாக ஆவணப்படுத்தி வைப்பதோடு, பள்ளி செல்லாதவர்களை அருகே உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிகள் பாதிக்காதவாறு இந்த கள ஆய்வு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும்  அதிகாரிகளுக்கு  பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.