பாட புத்தகங்கள், கல்வி உபகரணங்களை முதல் நாளிலேயே வழங்கவும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு..

 
 பள்ளிக் கல்வி இயக்ககம்

பாட புத்தகங்கள் உள்ளிட்ட  கல்வி உபகரணங்களை பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே  மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2023-24-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) தொடங்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே  புத்தகங்கள், சீருடை, பேக், ஷூ உள்ளிட்ட கல்வி உபகரணங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கிட  அனைத்து  ஏற்பாடுகளையும் கல்வித்துறை முழு வீச்சில் செய்து வருகிறது. ரூ. 5 கோடி பாடப்புத்தகங்களையும் மாவட்ட வாரியாக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “2023-24-ம் ஆண்டுக்கான 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான பாடநூல்கள், 1 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான நோட்டு புத்தகங்கள், இதர கல்வி உபகரண பொருட்களின் தேவைப்பட்டியல்கள் பெறப்பட்டு,

school

அதன் அடிப்படையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் மூலமாக மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. பள்ளி திறப்பதற்கு முன்பாகவே வினியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, எவ்வித காலதாமதத்துக்கும் இடம் அளிக்காமல் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ-மாணவிகளுக்கு பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், இதர கல்வி உபகரண பொருட்கள் வழங்கிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.