நாளை பள்ளிகள் திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட புதுச்சேரி அரசு...
புதுச்சேரியில் நாளை (பிப்.4 ) பள்ளி , கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகதைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. கொரோனா 2வது அலை ஓரளவிற்கு குறையத் தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் 9 முதக் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. தொடர்ந்து டிசம்பரில் 1- 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
பின்னர் கொரோனா 3வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, தமிழகம், புதுவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. புதுச்சேரியில் ஜனவரி மாத தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்திருக்கிறது. இதனால் அம்மாநில அரசு பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவெடுத்துள்ளது .
அதன்படி நாளை ( பிப் 4- வெள்ளிக்கிழமை ) முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளை அம்மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேடி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளிகளில் வகுப்பறைகள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்றற்றுவது உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை வெப்பமானி கொண்டு பரிசோதித்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும் புதுச்சேரி கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.