பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. வைரலாகும் வீடியோ..
சிதம்பரம் பேருந்து நிலைய நிழற்குடையில் 12-ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய சம்பவம் , சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வதற்கான சிறிய பேருந்து நிறுத்தம் உள்ளது. அங்குள்ள நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு, சீருடையில் இருக்கும் மாணவர் ஒருவன் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டியுள்ளார். இதனை உடனிருந்த மாணவர்களில் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில் கட்டுயா... கட்டுயா என்று மாணவர்கள் கூற, அந்த மாணவனும், பள்ளி மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.
அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசுகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இதில் மாணவி 12-ம் வகுப்பு படிப்பதும், தாலி கட்டிய மாணவன் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.