நவ.,1ல் பள்ளிகள் திறப்பு : பள்ளிகல்வித்துறை திடீர் ஆலோசனை!

 
schools-open-3

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.  இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அத்துடன் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருவதால், மாணவர்கள் பல்வேறு வகையான மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்த நிலையில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க கோரிக்கை எழுந்தது.

school

இந்த சூழலில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரு வகுப்பில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி, முகக்கவசம் கட்டாயம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

school

இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து வரும் 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளை சுத்தம் செய்வது ,தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பள்ளிக்கு வராத  மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் வழிகாட்டி நெறிமுறைகளை விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.