தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசு துணைவியார் மறைவு - சீமான் இரங்கல்
தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் மூத்த செயற்பாட்டாளர்களுள் ஒருவருமான வியனரசு துணைவியார் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவரும், தமிழ்த்தேசிய அரசியல் களத்தின் மூத்த செயற்பாட்டாளர்களுள் ஒருவருமான ஆருயிர் அண்ணன் அ.வியனரசு அவர்களின் வாழ்விணையர், அன்பிற்கினிய அண்ணியார் வி.கோகிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழர் உரிமைக்கும், அதன் மீட்சிக்குமான இன விடுதலை அரசியல் களத்தில் என் தோளோடு தோளாகத் துணைநிற்கும் அண்ணன் வியனரசு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பேரிழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்யவியலாதது. என் மீது பெருமதிப்பும், அளவற்ற நம்பிக்கையும் வைத்து தாயன்போடு பழகிய அண்ணியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும் மனத்துயரத்தை அளிக்கிறது.
உற்ற துணையை இழந்து வாடும் அண்ணன் வியனரசு அவர்களுக்கும், அன்புமகள்கள் குறள்மொழி, கயல்விழி, அன்புமகன் தமிழ்நெறி ஆகியோருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சி உறவுகளுக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அண்ணியார் வி.கோகிலா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று குறிப்பிட்டுள்ளார்.