விவசாயி திருமூர்த்தி மறைவு - சீமான் இரங்கல்

 
seeman

விவசாயி  திருமூர்த்தி மறைவு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி  திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

செயற்கை உரங்கள், பூச்சுக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்தாமல் முழுவதும் இயற்கை முறையிலான வேளாண்மையை நடைமுறையில்  லாபகரமாக செய்ய முடியும் என்பதை தமது இடையறா முயற்சியாலும் கடும்  உழைப்பாலும்,   நிறுவிய புகழுக்குரியவர்.

seeman

ஏர்முனை நிறுவனத்தை தொடங்கி இயற்கை முறையில் தாம்  உற்பத்தி செய்யும்  வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி மஞ்சள் தூள், குங்குமம், குளியல் கட்டிகள், தேங்காய் எண்ணெய், சிறுதானிய சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களில் வெற்றிகரமாக விற்பனைசெய்து  வேளாண்மையில் ஆர்வங்கொண்ட தமிழிளந் தலைமுறையினருக்கு முன்னத்தி ஏராக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை. 

"நம்மாழ்வாரின் ஆலம் விழுதுகள்" என்ற அமைப்பினைத் தொடங்கி சிதறிக்கிடந்த   இயற்கை முறை வேளாண்மையில்  ஆர்வங்கொண்ட  விவசாயிகளை ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுத்த பெருமைக்குரியவர். அவருடைய மறைவென்பது  இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, வேளாண்மையை வாழ்வியலாக கொண்ட தமிழ் இனத்திற்கே ஏற்பட்ட  இழப்பாகும். 

seeman

சகோதரர் திருமூர்த்தியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், வேளாண் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

முழுவதும் இயற்கை வழி வேளாண்மை என்பது கற்பனையோ, மூட நம்பிக்கையோ அல்ல; அதுதான் நம் வாழும் பூமியை பாழ்படாமல் பாதுகாக்கும்  பண்பாட்டு வேர் என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவிய விவசாயி திருமூர்த்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.