திருநெல்வேலியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் உதவி!

 
seeman

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிவாரண உதவிகளை வழங்கினார். 

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடுத்திய துணி தவிர மாற்று துணிகளுக்கு கூட வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது.  வீடுகளில் உள்ள பொருட்கள் அடித்து செல்லப்பட்டும், வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டும் வீணடிக்கப்பட்டு விட்டது.  வீடுகளில் வளர்த்து வந்த கால்நடைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.  அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வதென்று தெரியாத நிலைமையில் தென்மாவட்ட மக்கள் உள்ளனர். அரசு சார்பில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிவாரண உதவிகளை வழங்கினார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி  மாவட்டம்  பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட சமாதானபுரம் பகுதியில் கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை  வழங்கினோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.