நாம் தமிழர் கட்சிக்கு எதிரான NIA சோதனையை கண்டித்த அனைவருக்கும் நன்றி - சீமான்

 
Seeman

நாம் தமிழர் கட்சியினர் வீடுகளில் நடத்தப்பட்ட தேசிய புலனாய்வு முகமை சோதனையை கண்டித்துள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் அவெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கு இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது அதிகாரக் கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர்கதையாகிவிட்டது.   அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ்  மண்ணின் வளங்களை காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் மோடி அரசு தனது கைப்பாவை அமைப்பான தேசிய  புலனாய்வு முகமை (NIA)  மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும் போக்கினை கண்டித்துள்ள அனைவருக்கும் நன்றி. 


தமிழக வாழ்வரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அண்ணன் வினோத் அவர்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர் ஏகலைவன் அவர்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்களுக்கும், நடிகை சமூகச் செயற்பாட்டாளர் கஸ்தூரி அவர்களுக்கும், ஊடகவியலாளர் தம்பி வளர்மெய்யரிவான் அவர்களுக்கும், தம்பி கிஷோர் கே சாமி அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.