சுவாமிமலை கோயிலில் படுத்துறங்கிய பக்தர்கள் நள்ளிரவில் நீர்பாய்ச்சி விரட்டியடிப்பா?- சேகர்பாபு விளக்கம்
சுவாமிமலை கோயிலில் சுத்தம் செய்யப்பட்டதே தவிர பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான திருமண விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மக்கள் நலத் திட்டங்களை இந்து சமய அறநிலையைதுறை செய்து வருகிறது. 22 ஆயிரம் மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பவர்கள் இந்த துறையின் சார்பில் பயின்று வருகிறார்கள். அதேபோல பல்வேறு வகையில் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்கு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 47 ஆயிரம் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜையில் பங்கேற்று பலமடைந்துள்ளனர் இப்படி எண்ணிலடங்கா திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆன்மீகப் பயணம் என்பது காசி ராமேஸ்வரம், அறுபடை வீடுகள் முருகர் ஸ்தலம், ஆடி மாத அம்மன் சுற்றுலா அனைத்து கோவில்களுக்கும் ஆன்மீகம் பயணம் மேற்கொள்வோர் முழுவதுமாக கட்டணமில்லாமல் பெரு உதவியாக இருக்கின்ற ஆட்சியாக தமிழ்நாடு அரசு உள்ளது. பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பவர்கள், அடுத்து இறை நம்பிக்கையோடு திருக்கோவில் சார்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையோடு இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக 2022-2023 ஆம் ஆண்டு முதன்முதலாக 500 திருமண ஜோடிகளுக்கு முதலமைச்சர் 500 குடும்பங்களுக்கு விளக்கேற்றினார். 2023-2024 ஆம் ஆண்டு திருமணங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் 500 என்பதை 600 ஆக மாற்றினார், ரூபாய் 50 ஆயிரத்தை இரண்டாவது கட்டத் திருமணம் செய்தவர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தார்.
இன்று 2024-2025 சட்டப்பேரவை அறிவிப்பில் இதே திருமணங்கள் 700 ஜோடிகளுக்கு என்று அறிவித்தார் முதலமைச்சர், இந்த 700 ஜோடிகளில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் திருமணம் செய்து வைத்துள்ளார், தமிழ்நாடு முழுவதும் இன்று 379 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. துறை சார்ந்த பணிகளில் அறத்தையும் ஒருங்கிணைத்து அறநிலையத்துறையாக மிளிர்வது திராவிட மாடல் ஆட்சியில் தான்” என்றார்.
சுவாமிமலை கோவிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படவில்லை, விழா காலங்களில் கோயில்களில் யாரும் தங்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இரவில் நடை அடைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற திருவிழா காலங்களில் சுத்தம் செய்வது நடைமுறை. இரவு அனைத்து பூஜைகளும் நடந்த பிறகு அடுத்த நாள் காலை பூஜை வழக்கம் போல் தொடங்க வேண்டும் என்பதற்காக தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்கின்ற பணிதான் நடைபெற்றது, பக்தர்கள் யார் மீதும் தண்ணீர் அடிக்கும் நிகழ்வு நடக்கவில்லை, இப்படி ஏதாவது கிடைக்குமா? என்று திரித்துக் கூறுவதற்கு கங்கணம் கட்டி செயல்படுபவர்கள் இந்தப் பொய்களை எட்டுக்கால் பாய்ச்சல் கொண்டு சேர்க்கிறார்கள். உண்மை எப்போதுமே உறங்க செல்லாது உண்மை இரண்டு நாள் மூன்று நாள் வேண்டுமென்றால் மறைவில் இருக்கலாம் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் சுவாமி மலையில் பக்தர்கள் மீது எந்தவிதமான அட்ராசிட்டியும் நடைபெறவில்லை” என்று கூறினார்.


