“நானும் ரவுடிதான்” என கடைசியா வந்து விஜய் போராட்டம் செய்கிறார்- சேகர்பாபு விமர்சனம்
எஸ்ஐஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நின்று நானும் ரவுடிதான் என்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கூறுகிறார் என அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார்.

சென்னை அம்பத்தூர் தொழில்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன பேருந்து நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து புதூரில் புதிதாக அமைக்கப்படும் விளையாட்டு மைதானத்தை அவர் பார்வையிட்டார். விளையாட்டு மைதான பணிகளை தொடங்காத ஒப்பந்ததாரரை கடிந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பணிகளை வரும் வெள்ளிக்கிழமைக்குள் மும்முரப்படுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் ஒப்பந்தம் சனிக்கிழமை ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். இந்த ஆய்வின்போது அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, "சேக்கிழார்க்கும் கம்பருக்கும் வித்தியாசம் தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி. எஸ்ஐஆர் விவகாரத்தில் கடைசியாக வந்து நானும் ரவுடிதான் என்று விஜய் கூறிக் கொள்கிறார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று சொல்வார்கள். அதுபோல திட்டங்களை சரியான நேரத்திற்கு கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் அது பயனற்றது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முதல்வரின் அறிவுரைப்படி அனைத்து துறைகளிலும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப் படுகிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.


