அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு: அன்புமணி வலியுறுத்தல்!!

 
Anbumani Ramadoss

 உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை  மிகவும் நேர்மையாகவும்,  சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

anbumani ramadoss

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  வரும் 28-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறவுள்ளன.  4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

anbumani

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில்  மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  கடந்த 11 ஆண்டுகளாக ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் கூட நியமிக்கப்படவில்லை. அதனால் கல்வித்தரம் சீரழிந்து வரும் நிலையில், அதைத் தடுக்க புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.  4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதாக கடந்த இரு  ஆண்டுகளுக்கு முன்  அறிவித்த  தமிழக அரசு, அதற்கான அறிவிக்கையை வெளியிடாதது ஏன்? என்று கேட்டு கடந்த 9-ஆம் நாள்  மருத்துவர் அய்யா அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது  பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி.

anbumani

உதவிப் பேராசிரியர் பணிக்கு தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும்  முறை குறித்து  தேர்வர்களிடம் பல்வேறு ஐயங்கள் நிலவுகின்றன.  அதேபோல், கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தேர்வு செய்யபட்ட போது இட ஒதுக்கீட்டு விதிகள் பின்பற்றப்பட்டதில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்தன.  இது தொடர்பான ஐயங்கள் அனைத்தையும் போக்கும் வகையில், இந்த முறை அத்தகைய தவறுகள்  நடக்காத வகையில்,   உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை  மிகவும் நேர்மையாகவும்,  சமூகநீதியை காக்கும் வகையிலும் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.