திருக்குறளில் கலப்படம்... ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்- செல்வப்பெருந்தகை
ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த 13ம் தேதி ஆளுநர் மாளிகையில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 50 மருத்துவர்கள் கௌரவிக்கப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு நினைவுப் பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. அந்தக் கேடயத்தில் திருக்குறள் ஒன்றும், அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்றும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிந்தது. ஆனால் தற்போது அப்படி திருக்குறளே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் போலியான திருக்குறள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆளுநர் மாளிகை வழங்கிய கேடயத்தில்,
செருக்கறிந்து சீர்மை பயக்கும் மருப்பொடு
மன்னுஞ்சொல் மேல்வையப் பட்டு. ( திருக்குறள் 944) - என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையாக திருவள்ளுவர் எழுதிய 944வது குறள்,
அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. - என்பதுதான் . ஒரு வேளை குறளின் எண் மாறியிருக்கலாம் என்றால், அதுவும் இல்லை ; திருவள்ளுவர் எழுதிய 1330 குறள்களில் இப்படி ஒரு குறளே இல்லை என்கிறனர் தமிழ் ஆர்வலர்கள்.
கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
— Selvaperunthagai K (@SPK_TNCC) July 16, 2025
திருவள்ளுவருக்கு…
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் எக்ஸ் தள பக்கதில், “கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


