கோவையில் ரூ.133.21 கோடியில் செம்மொழிப் பூங்கா - முதல்வர் அடிக்கல் நாட்டினார்!!

 
tn

முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் ரூ.133.21 கோடியில் அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, 7945 பயனாளிகளுக்கு ரூ.110.51 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று (18.12.2023) கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 7945 பயனாளிகளுக்கு 110 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுதல்

mk stalin

 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற உ தமிழ் செம்மொழி மாநாட்டில், கோயம்புத்தூரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்.அதன் தொடர்ச்சியாக, 22.11.2021 அன்று கோயம்புத்தூர் வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், காந்திபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நடைபாதை போன்ற அனைத்து வசதிகளும், கூட்ட அரங்கு, வெளி அரங்கு போன்ற கட்டமைப்புகளும் கொண்ட செம்மொழிப் பூங்கா இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்.

கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பறைசாற்றும் வகையில், தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக கொண்டு பொதுமக்கள் இயற்கையை அறிந்து கொள்ளவும், தாவர இனங்களை நிலைக்கத் தக்க வகையில் பயன்படுத்துதலை ஊக்கப்படுத்தவும், நீலகிரி உயிர்கோளப்படுகையில் உள்ள அரிய வகை தாவர இனங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழல் ஆளுமையை நிறுவி மேம்படுத்தி மேலாண்மை செய்யும் நோக்கிலும், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

stalin

மேலும் உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியு பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும், அதன் தொடர்புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் அத்தகைய பூங்கா அமைக்கப்படாத காரணத்தால் சிறப்பு மிக்க தாவரங்களைக் கொண்ட செம்மொழிப் பூங்கா காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளது.இவற்றில் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும், இரண்டாவது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் பூங்கா அமைக்கப்படவுள்ளது. தற்போது முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் நோக்கத்துடன் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு தாவரங்களை பற்றி அறிந்து கொள்ளவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும், சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து அறிந்திடவும், பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கு ஏற்ற வகையிலும் செம்மொழி பூங்கா 133.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகதரத்துடன் அமைக்கப்படவுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த இப்பூங்கா இந்தியாவிலேயே தனித்துவத்துடன் பல சிறப்புகளை உள்ளடக்கியிருக்கும். இப்பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நீர் வனம், நட்சத்திர வனம், நலம்தரும் வனம், நறுமண வனம் போன்ற பல வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இதில் இயற்கை அருங்காட்சியகம், திறந்தவெளி அரங்கம், இயற்கை உணவகம், அனைத்து நவீன வசதிகளுடன் ஆயிரம் இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம் ஆகியவைகளும் அமைக்கப்படும்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

stalin
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை - மகளிர் திட்டத்தின் கீழ், 3000 பயனாளிகளுக்கு கடனுதவிகள்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 284 பயனாளிகள் பயன்பெறும் வகையில், வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் ஓய்வூதியத் தொகை, இ-பட்டாக்கள், சாலை விபத்து நிவாரணம், பழங்குடியினருக்கான சாதிச்சான்றுகள், வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டாக்கள்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1149 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பழங்குடியினர் வகுப்பு சான்றுகள், வன உரிமைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள், தையல் இயந்திரங்கள்; மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப்பிரிவின் கீழ் 980 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், சலவைப்பெட்டிகள் மற்றும் இ.பட்டாக்கள்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 534 பயனாளிகளுக்கு புதிதாக காப்பீடு அட்டைகள்; தொழிலாளர் நலத்துறையின் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் 210 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, இயற்கை மரண நிதியுதவி, பணியின் போது விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி;

கூட்டுறவு துறையின் சார்பில் 200 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைகளுக்கு கடனுதவி, மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடனுதவி, மாற்றுதிறனாளிகளுக்கு கடனுதவி, சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி, பணிபுரியும் மகளிருக்கான கடனுதவி, மகளிர் தொழில்முனைவோர் கடனுதவிகள்; பேரூராட்சிகள் சார்பில் 302 பயனாளிகளுக்கு சாலையோர வியாபாரிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நிதியுதவி; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 242 பயனாளிகள் பயன்பெறும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பரப்பு அதிகரித்தல், பண்ணை பற்றாக்குறை சரிசெய்தல், வாழைத் தார் உரையிடுதல், வேளாண்மை விற்பனை மற்றம் வணிகத்துறை மூலம் தரமான கரும்பு அச்சு வெல்லம் தயாரிக்கும் மையம் அமைத்தல், புதிய உழவர் சந்தை அடையாள அட்டைகள் வழங்குதல் போன்றவையும்; மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 60 பயனாளிகள் பயன்பெறும் வகையில், பேட்டரியால் இயக்கப்படும் சக்கர நாற்காலிகள், மாற்று திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலி மற்றும் வாகனம், ஸ்மார்ட் கைப்பேசிகள், தையல் இயந்திரங்கள்;

stalin

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 20 பயனாளிகளுக்கு செல்வபுரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்; தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு சுற்றுலா வாகனம், பயணிகள் ஆட்டோ, பல்பொருள் அங்காடிகள் அமைக்க கடனுதவிகள், விபத்து நிவாரண நிதி; சமுக நலத்துறை சார்பில் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்; என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 7945 பயனாளிகளுக்கு 110 கோடியே 51 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.