" அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் கொடுக்கலாம்" - ஜெயக்குமார் விமர்சனம்
செந்தில் பாலாஜி தவறு செய்தது தெரிய வந்ததும் நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று அதிகாரி செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலர் சந்தித்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த நிலையில், "முறைகேட்டில் ஈடுபட்டதால் தான் செந்தில் பாலாஜியை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார். ஆனால் திமுக அரசு அவரை காப்பாற்றத் துடிக்கிறது. செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முதல்வர் ஸ்டாலின். அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதால் அமைச்சர்களுக்கு ஏன் பதைபதைப்பு? மா.சுப்பிரமணியன் அமைச்சராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர 30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான் நடைபெற்றுள்ளது. இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும்" என்றார்.