சிறையில் தவறி விழுந்த அமைச்சர் செந்தில் பாலாஜி - மருத்துவமனை தரப்பில் தகவல்
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு வழக்கத்திற்கு மாறாக இருந்தது. இதன் காரணமாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்த சூழலில் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி இன்று காலை 4.30 மணி அளவில் தன்னுடைய படுக்கையில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதை அறிந்த காவலர்கள் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அணுகி அங்கு அவர்கள் உடல் நிலையை கவனித்துள்ளனர். இன்று காலை 6.45 மணி அளவில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சையின் போது அவரது கால்களில் இருந்த நரம்புகள் எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு காலில் அதிக வலி இருப்பதாக தெரிகிறது.