செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி!

 
senthil balaji

நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனை தொடர்ந்து அந்த சோதனை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக வர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவும் ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.  இதனிடையே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ததை உறுதி செய்த நீதிபதி, அவரை வருகிற 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரைவிட்டார். இதனையடுத்து அவர் புழல் சிறை காவலர்களின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். 

senthil balaji

இந்நிலையில், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளதால், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை நிராகரிக்க கோரிய மனு செல்லத்தக்கதல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாமின் மனு, அமலாக்கப் பிரிவு காவலில் வைத்து விசாரிக்க கோரிய மனு மீது சற்று நேரத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.