வெள்ளத்தால் அவதிப்படும் மக்கள்... மின் கட்டணம் கட்ட அவகாசம் தரப்படுமா? - அமைச்சர் விளக்கம்!
சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி, அங்குள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஏழை, எளிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சாலைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை தொடர்கிறது. நாளை வரை மழையின் தீவிரம் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது ஒரு புறம் என்றால் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் கனமழை காரணமாக சென்னைக்கு திரும்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால், அவர்கள் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே இந்த மாதம் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோல பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், விரைந்து சரிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்து பேசியுள்ள மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "ஓ.பன்னீர் செல்வம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரின் கோரிக்கை. ஆனால் இதுவரை மக்கள் யாரும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. இருப்பினும் தமிழக முதலமைச்சரிடம் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும்” என்றார்.