தொடர் கனமழை : சென்னையில் 10 நாட்களுக்கு அனைத்து காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு நிலவும்!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது . இதனால் காய்கறி வரத்து குறைந்து அதன் விலை உச்சத்தை அடைந்துள்ளது . கடந்த சில வாரங்களாக சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது . இதனால் சில்லரை வணிகத்தில் தக்காளி விலை 180 ரூபாய் வரை எட்டியது . இதனால் சாமானியர்கள் பெரிதும் கலக்கம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் முயற்சியால் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அத்துடன் மழை சற்று ஓய்ந்ததால் மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்து அதன் விலை குறைய தொடங்கியது. இதை தொடர்ந்து கோயம்பேடு சந்தையில் நேற்று தக்காளி விலை 70 முதல் 75 வரை உயர்ந்தது. போக்குவரத்தில் சிக்கல், பெட்ரோல் விலை ஏற்றம், மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்ததாக வணிகர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் தொடர் மழையினால் காய்கறிகள் நீரில் மூழ்கி அழுகி போனதால் அதன் வரத்து குறைந்துள்ளது . இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது என்றும் இன்னும் பத்து நாட்களுக்கு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உச்சத்தில் இருக்கும் என்றும் அதன் பிறகு விலை படிப்படியாக குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமிழ்நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருவது கவனிக்கத்தக்கது.