திமுக மகளிர் உரிமை மாநாடு - இன்று தமிழகம் வருகிறார் சோனியா காந்தி!

 
Sonia

திமுக மகளிரணி நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று சென்னை வருகிறார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 100வது பிறந்தநாளை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக முடிவு செய்தது. இதன் காரணமாக கலைஞர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் ஆண்டு முழுவதும் பொதுக்கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் அனைத்து பிரிவுகள் சார்பிலும் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்ட வருகின்றன. இந்த நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறவுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 4.30 மணிக்கு இந்த மாநாடு நடைபெறவுள்ளது. திமுக துணை பொதுச்செயலாலரும், எம்பியுமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அகில இந்திய அளவில் பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Kanimozhi

இந்த நிலையில், திமுக மகளிரி உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி இன்று தமிழகம் வருகிறார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். இன்றிரவு 10.40 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் இன்று இரவு தங்குகின்றனர். இதேபோல் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியும் இன்று சென்னை வருகிறார்.