இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
மகா சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 12.02.2026 (வியாழக்கிழமை), 13.02.2026 (வெள்ளிக்கிழமை), 14.02.2026 (சனிக்கிழமை) மற்றும் 15.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12.02.2026 (வியாழக்கிழமை) அன்று 125 பேருந்துகளும், 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று 500 பேருந்துகளும், 14.02.2026 (சனிக்கிழமை) 505 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13.02.2026 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும், 14.02.2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து 13.02.2026 மற்றும் 14.02.2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,901 பயணிகளும், சனிக்கிழமை 5,364 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,128 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியைப் பயன்படுத்தி, தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

