பெண் சிசுக்கொலைகளை தடுக்க சிறப்புக் குழு - மதுரை ஆட்சியர் உத்தரவு!!
பெண் சிசு கொலைகளை தடுக்க மதுரையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் பெண் சிசுக்கொலை என்பது மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. வறுமை மற்றும் ஆண் வாரிசு மீதான ஈர்ப்பு உள்ளிட்டவை காரணமாக பெண் சிசுக்கொலை என்பது பல இடங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நடைபெற்ற சிசுக் கொலை சம்பவத்தின் எதிரொலியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் சிசு கொலைகளை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ருவாய்த்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை ஆகியவை உள்ளிட்ட 10 துறைகள் அடங்கிய சிறப்பு குழு ஒன்றை அமைத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் ,சுகாதார பணிகள் இணை இயக்குனர் ,மதுரை சைல்டு லைன் 1098 ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகிய துறைகளுடன் சேர்ந்து சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிசுக்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
வறுமை ,கல்வியறிவின்மை ,வளர்க்க இயலாத சூழ்நிலை ஆகியவற்றை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மாற்றம், தேவையான வாழ்விடம், கல்வி அறிவு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பராமரிக்க இயலாவிட்டால் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் தொட்டில் குழந்தை திட்டத்தில் குழந்தைகளை வழங்கலாம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.