புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா? கவலை வேண்டாம் : தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா நிவாரண நிதி ரூபாய் நான்காயிரம், இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 1000 உள்ளிட்ட நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிலவற்றை முதல்வர் முக ஸ்டாலின் செயல்படுத்தினார். கொரோனா நிவாரண நிதி முழுமையாக வழங்கப்பட்ட பின் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இருப்பினும் புதிய ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு தொடர்ந்து அவர்களின் விண்ணப்பம் ரத்தாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர்கள் மற்றும் முகவரி மாற்றம், குடும்ப உறுப்பினர் சேர்த்தல் ,நீக்கம் உள்ளிட்ட அனைத்து ரேஷன் கார்டு தொடர்புடைய சேவைகளும் இந்த இணையத்தில் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் ஆதார் எண்ணுடன் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகலை பதிவேற்ற வேண்டும். இவற்றை இணையதளம் வாயிலாகவே அதிகாரிகள் சரிபார்த்து வீடுகளுக்கு கள ஆய்வு ஊழியர்களை அனுப்பி குடும்ப அட்டை வழங்க பரிந்துரை செய்வர்.
குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்பவர்கள் போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் ரேஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இனி ரேஷன் கார்டு விண்ணப்பம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.