ஏடிஎம் கொள்ளையில் திடுக்கிடும் தகவல்கள் - ஆந்திரா விரைந்த தனிப்படை

 
atm robbery

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் தொடர்பாக தனிப்படை போலீசார் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர். 

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 10வது தெருவில் இயங்கி வரும் ஸ்டேட் பேங் ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோல் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் அதே மர்மநபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.33 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், கலசப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை திருடி சென்றுள்ளனர். இதேபோல் போளூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் புகுந்து கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்ஐ உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு ஏடிஎம் இயந்திரத்தை  மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொள்ளைபோன நான்கு ஏடிஎம் இயந்திரங்களில் மூன்று எஸ்பிஐ வங்கி ஏடிஎம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  

car checking

போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்கைளை ஆய்வு செய்தபோது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது. அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது.  வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளதால், ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். இதேபோல் ஆந்திர மாநிலத்திற்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.