ஆன்மீகம் அறிவோம் : கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டால்...

 
1 1

திருக்கார்த்திகை நாளன்று மட்டுமின்றி கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வத சிறப்பான பலனை தரும். தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். அகல் விளக்குகளை தரையில் வைக்கக் கூடாது. கோலமிட்டு வைத்தாலும் விளக்கை எப்போதும் தரையில் வைக்கக் கூடாது. சிறிய வாழை இலை, அரச இலை, ஆல இலை அல்லது ஒரு சிறிய தட்டின் மேல் தான் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன்பாகவே வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். 6 மணிக்கு முன்பாக விளக்கை ஏற்றுவது சிறப்பு. அதன் பின்பு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, பூஜை அறையிலும் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு உப்பு, மஞ்சள், குங்குமம், போன்ற மங்களகரமான பொருட்களை வீட்டிற்கு வாங்குவது நல்ல பலனை கொடுக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் இவ்வாறு விளக்கு ஏற்றக்கூடிய வழிபாட்டு முறையை கடைபிடிக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.

கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கு ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டால் இறைவனிடம் வைக்கக் கூடிய வேண்டுதல் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. அனைவருக்குமே பல வேண்டுதல் இருக்கும். இறைவனிடம் நீண்ட நாட்களாக வேண்டிக் கொண்டே இருப்பார்கள். அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கான வரம் இன்னும் கிடைக்காமல் தாமதிக்கும்.

அப்படிப்பட்ட வேண்டுதல்களில் ஏதாவது ஒரு வேண்டுதலை குறிப்பாக எடுத்துக்கொண்டு, தினமும் பூஜை அறையில் அந்த வேண்டுதலுக்காக விளக்கேற்றி இறைவனிடம் வரம் கேட்டால், நீங்கள் வேண்டிய வேண்டுதல் இந்த கார்த்திகை மாதம் முடிவதற்குள் பலிபதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதும் இந்த தீப ஒளியில் இறைவனை வழிபாடு செய்வது கோடான கோடி நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.