#BREAKING எஸ்.பி.வேலுமணி மீது மீண்டும் வழக்கு பதிய அனுமதி

 
velumani velumani
சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடந்த 98 கோடியே 25 லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
velumani
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக, உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்த  எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஆதாரங்களை சேகரித்தால், அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரலாம் என தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில், ஒப்பந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு  வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்   முன்பு  மீண்டும் விசாரணை வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில்,  முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு, கடந்த  2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி 2024 அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளான கே எஸ் கந்தசாமி, மற்றும் கே விஜயா கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை செப்டம்பர் 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.