கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

 
மீனவர்கள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே விசைப்படகுகளில் சென்று மீன்பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். அவ்வாறு பீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் மீனவர்களை கொடூர ஆயுதங்களால் அடித்து விரட்டியடிப்பதோடு, அவர்களது வலைகள் மற்றும் மீன்களை பறித்து சென்றுவிடுவார்கள். 

இந்த நிலையில், இன்று காலை ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்படித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை வழிமறித்து அவர்கள் மீது கற்களை கொண்டு வீசி கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உடனடியாக தங்களது வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.