மக்கள் தான் எஜமானார்கள் - 2வது நாள் ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..

 
ஸ்டாலின்


சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு இன்று 2வது நாளாக நடைபெற்று வருகிறது. 


கொரோனா பணிச்சூழல் காரணமாக மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளின் ஒருங்கிணைந்த மாநாடு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துரை, வனத்துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைந்த மாநாடு தொடங்கியது.  3 நாட்கள் நடைபெறும் எனக்கூறப்பட்ட இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

மக்கள் தான் எஜமானார்கள் - 2வது நாள் ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.. 

அப்போது  சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் சமூக விரோத சக்திகள், கூலிப்படைகளை இரும்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இன்று 2வது நாளாக நடைபெற்று வரும் மாநாட்டில் தலைமை செயலாளர் இறையன்பு, ஆட்சியர்களை வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில்  பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ மாவட்ட ஆட்சியர்கள்  தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்து கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்கலாம் என்று கூறினார்.  இந்த அரசினுடைய திட்டங்களின் பயன் மக்களை  சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் தங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

எங்களுக்கும்,  உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என்று தெரிவித்தார்.  எனவே ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக் காட்டாக அமைய முடியும்.

ஸ்டாலின்

ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் தங்களது கருத்துக்களை கூறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருள்கள் கிடைக்கிறது. அது மஞ்சளாக இருக்கலாம், இயற்கை வளங்களாக இருக்கலாம். அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அரசுக்கு வருமானம் பெறுவது, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில்,  பெருந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து நீங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து நீங்கள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். அந்த வகையில் மாவட்ட கலெக்டர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லி உரையை முடித்துக்கொள்வதாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.