பத்திரப்பதிவுக்கான முத்திரை தாள் கட்டணம் உயருகிறது - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!

 
stamp duty

பத்திரப்பதிவுக்கான முத்திரை தாள் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. தமிழ்புத்தாண்டு மற்றும் சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இந்த நிலையில், சட்டப்பேரவையில், பத்திரப்பதிவுக்கான முத்திரை தாள் கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி  தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:- 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன் டங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த சட்டத்திருத்தத்தில் 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது. இதே போல, நிறுவனங்களுக்கான சங்க விதிகளுக்கான முத்திரைதாள் கட்டணம் ஐந்து லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத் தாள் கட்டணம் 500 ரூபாயும், நிறுவனங்களுக்கான ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா பேரவையில் நிறைவேறியவுடன் அமலுக்கு வர உள்ளது.