கலாஷேத்ரா விவகாரம்...தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் - மாநில மகளிர் ஆணைய தலைவர்

 
Kumari

கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும் என மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி கூறியுள்ளார். 

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.  மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரிக்கு வரும் 6ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக,  மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரில் விசாரணை நடத்தினார். புகாரின் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், உதவி பேராசிரியர் ஹரி பத்மன் திடீரென தலைமறைவாகினார். இந்நிலையில் தற்போது பேராசிரியர் ஹரிபத்மனை போலீஸார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில், மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி இன்று விசாரணை நடத்தினார்.  அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் விரைவில் அறிக்கை அளிக்கப்படும். மாணவிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நான் நேரிலும் சந்திப்பேன். பாலியல் புகார் தொடர்பாக பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். புகார்கள் ஆன்லைன் மூலமும் வந்துள்ளன. புகார்கள் மற்றும் ஆய்வு அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்படும்.  ஆதாரத்தின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐசிசி கமிட்டியின் ஆவணங்களை கேட்டுள்ளேன். கலாஷேத்ராவில் புகார் பிரிவு இயங்கியது குறித்து எந்த ஆவணங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு கூறினார்