தனக்குதானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த மாணவி! காதலனின் அன்பு பரிசால் நேர்ந்த கொடூரம்
புதுக்கோட்டை அருகே திருமணமாகாத நர்சிங் கல்லூரி மாணவி கர்ப்பமான நிலையில் தனக்கு தானே பிரசவம் பார்த்து பெற்றெடுத்த பெண் குழந்தையை உயிருடன் வீட்டு வாசலிலேயே புதைத்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (21). இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில் இவரது காதலனுடன் பலகி கர்ப்பமான நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். இவரது தந்தை வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நிலையில், நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா இன்று அவரது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வினோதாவிற்கு திருமணமாகாத நிலையில், பெண் குழந்தையினை பெற்றெடுத்ததால் குழந்தை பிறந்த உடனே அவரது வீட்டு வாசலிலேயே குழந்தையை உயிருடன் குழி தோண்டி புதைத்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பெண்மணி ஒருவர், குழந்தையின் அழுகுரல் கேட்டு பார்த்தபோது குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்த போது குழந்தை உயிருடன் இருந்ததால் உடனடியாக பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

தற்போது அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பனையப்பட்டி போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தாய் வினோதா மற்றும் அவரது காதலனான வயலோகம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன்(21) ஆகிய இருவர் மீதும் பனையப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் கொடுத்த புகாரி அடிப்படையில் குற்ற எண் 37/2025 ன் படி 91 இயற்கைக்கு மாறாக பெற்ற குழந்தையை மறைத்தல் 49ன்படி குழந்தையை மறைக்க உடந்தையாக இருத்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் விசாரணை முடிவிலேயே பிறந்து உயிருடன் இருந்த குழந்தையை எதற்காக குழி தோண்டி புதைத்தனர் என்பது தெரியவரும்.
3


