கோவை PSG மருத்துவக் கல்லூரியில் கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு
கோவை பீளமேடு தனியார் மருத்துவமனை கழிவறையில், உயிரிழந்த நிலையில் முதுகலை மயக்கவியல் துறை மாணவி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவபூரணி (29). எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார். மேலும் அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனை கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது, பவபூரணி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பீளமேடு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பவபூரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த பீளமேடு போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


