கடலூர் விபத்தில் மாணவர்கள் பலி.. அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது - இபிஎஸ் இரங்கல்..
கடலூர் வேன் விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் - கடலூர் ரயில் வழித்தடத்தில் வேப்பர்ஸ் குவாரி ரயில் நிலையத்திற்கும் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையே செம்மங்குப்பம் என்னும் பகுதியில் ரயில்வே கிராசிங் கேட் ஒன்று அமைந்துள்ளது. இன்று காலை 7.45 மணியளவில் இந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது , ரயில் மோதி விபத்துக்குள்ளானது. வேன் ஓட்டுநர் உள்பட 6 பள்ளி குழந்தைகள் வேனில் பயணம் செய்த நிலையில் , இந்த கோர விபத்தில் நிவாஸ்(12) , சாருமதி (16) இரண்டு பள்ளி மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செழியன் என்கிற மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேன் விபத்துக்குள்ளானதை பார்த்து அவ்வழியே சென்ற அண்ணாதுரை என்பவர், விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்பதற்காக சென்போது மின்கம்பி அருந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


