கண்டித்த ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்
சிவகாசி-திருத்தங்கல் அரசு பள்ளி ஆசிரியருக்கு தலையில் அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் எஸ். ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிபவர் சாமி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கடற்கரை( வயது 42). இவர் மாணவ- மாணவியரிடையே கல்வி கற்பதில் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் ஆத்திரமடைந்த பிளஸ் ஒன் பயிலும் ஒரே வகுப்பை சேர்ந்த, ஆசிரியர் கடற்கரையிடம் பாடம் பயின்று வரும் மாணவர்களான யுகேஷ் மற்றும் முகேஷ் ஆகிய இருவரும், ஆசிரியர்களின் ஓய்வறையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த ஆசிரியர் கடற்கரையை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
தலையில் காயம் அடைந்த ஆசிரியர் கடற்கரை திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை தலையில் அரிவாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடிய பிளஸ் ஒன் மாணவர்கள் இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர். மாணவர்கள் ஆசிரியரை அறிவாளால் வெட்டிய சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.