ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பாக, தமிழக அரசின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை, எங்களின் பேரணியை தடுத்து நிறுத்துவது நியாயம் இல்லை என ஆர்.எஸ்.தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அதே சமயம் தமிழக அரசு சார்பில், பிரச்சனைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கமுடியாது என கூறப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளிக்கப்படும் எனக் கூறினர். மேலும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.